Tuesday, March 29, 2011

இருந்த காலம்

கொஞ்ச நாட்களாக
அப்பாவுடன் அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அப்பா இறந்து
வருடங்களாயிற்று
மனைவி கவனித்து
மருத்துவரிடம் போகலாமா
என்கிறாள் கவலையுடன்

உயிரோடிருந்த போது
அப்பாவும் நானும்
ஒருவருடம் முழுக்க
ஒரே வீட்டில் இருந்து கொண்டு
பேசாமல் இருந்தோம்
இப்போது நானும்
என் மகனும்
இருப்பது போல ....

ஏதோ ஒரு
அற்ப காரணம்தான்..
ஆனால் தோழர்களே
அற்ப உயிர்களின்
காரணங்கள்
வேறெப்படி இருக்கும்?


மருத்துவரிடம் எதற்கு
நான்
என் கடனை
திருப்பிச்
செலுத்திக்
கொண்டிருக்கிறேன்
என்றேன்



அகண்டப் பெருவெளியில்
எங்கேனும் அலைந்து கொண்டிருந்தால்
அப்பாவுக்கும் இருக்கக் கூடும்
என்னிடம் சொல்ல
சில வார்த்தைகளேனும் ...
சொல்லிச் சிரிக்க
சில பழங்கதைகள்...

அவர் அப்பாவாகவும்
நான் மகனாகவும்
இருந்த
காலத்தில் நடந்த கதைகள்..
அவர் இறந்தவராகவும்
நான் இருப்பவனாகவும்
இல்லாத
அந்தக் காலத்தில்

3 comments:

LinkWithin

Related Posts with Thumbnails